பகவதி தலைமையிலான சுயாதீனக்குழுவை உதாரணமாகக்கொண்டு கலப்பு நீதிமன்றம்! – அரசுக்கு விக்கி யோசனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்த “நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட முடியும்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் 21.03.2019 அன்று உறுப்பு நாடுகள் இலங்கை அரசின் அனுசரணையுடன் 40/1 என்ற தீர்மானத்தினை நிறைவேற்றி இருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.

போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கும் எமது மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதற்குமே இந்தத் தீர்மானம் வழிவகுக்கப் போகின்றது.

இனப்படுகொலை புரிந்து எமது பெண்களை நூற்றுக்கணக்கில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவத்தை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரேரணைக்குச் சார்பாக செயற்பட்டமையும் வேதனையை அளிக்கின்றது.

30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவோ அல்லது அவற்றை நிறைவேற்றவோ விருப்பம் எதனையும் வெளியிடாத இலங்கை அரசு மாறாக இந்த தீர்மானத்தின் முக்கிய பல விடயங்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தே வந்துள்ளது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என்ற 30/1 தீர்மானத்தினை நிறைவேற்ற வலியுறுத்தும் 40/1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிக்கொண்டே கலப்பு நீதிமன்ற யோசனையை இலங்கை அரசு மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக நிராகரித்திருக்கின்றது.

இது எந்த அளவுக்கு இலங்கை அரசு 30/1 தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும் அதன் நேர்மைத் தன்மையையும் அதன் ஏமாற்று தந்திரத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.

ஐ.நாவுக்கு எழுத்து மூலம் கொடுத்த வாக்குறுதிகளையே அடுத்த நிமிடம் காற்றில் பறக்கவிடும் இலங்கை அரசு கடந்த பல தசாப்த கால இனப்பிரச்சினையில் எத்தனை உடன்படிக்கைகளை உதாசீனம் செய்திருக்கும் என்பதனையும் இது எந்தளவுக்குத் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்திருக்கும் என்பதையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடைபெற்றபோது அதனைத் தடுப்பதற்கு தவறி இருந்த ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை போரின் பின்னர் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிச் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான பெரும் கடப்பாட்டை கொண்டிருந்தன. ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையினூடான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையை அலட்சியமாகவும் விளையாட்டு போலவும் இலங்கை அரசு கையாளுவதற்குச் சர்வதேச சமூகம் இடமளித்திருப்பது இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கும் உலகில் ஒரு பிழையான முன்னுதாரணம் ஏற்படுவதற்குமே வழிவகுக்கப்போகின்றது.

இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்களானவை சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் உலகின் பலநாடுகளிலும் இன்று போர்க்குற்றங்கள் இடம்பெறாமல் சர்வதேச சமூகம் தவிர்த்திருந்திருக்கக்கூடும்.

ஆகவே, 40/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாடுகளும் 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் விலகவேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முற்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் காணிகளில் இன்னமும் இராணுவம் நிலைகொண்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. நீக்குவதானால் அதனிலும் கொடிய ஒரு சட்டத்தை ஏற்ற பின்னரே முன்னையதை நீக்கலாம் என்று அரசு கூறி வருகின்றது.

இந்த அறிக்கையை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் முல்லைத்தீவு வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

காணாமற்போன தமது உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் இராணுவ முகாம்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். வீதிகளில் நின்று போராடுகின்றார்கள். ஆனால் பலன் ஏதும் கிடைப்பதாக இல்லை.

அதனால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் தனது நிரந்தர அலுவலகம் ஒன்றை வடக்கு கிழக்கில் நிறுவவேண்டும் என்றும் நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

இதன் மூலம், வடக்கு கிழக்கில் தொடரும் மனித உரிமை மீறல்களை நிறுத்த முடிவதுடன் 30/1 தீர்மான விடயங்கள் நிறைவேற்றப்படுவதை கண்காணிப்புச் செய்யவும் முடியும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் உறுப்புநாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

அதேவேளை, போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு உடனடியாக உறுப்புநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கமுடியாது என்ற அரசின் கூற்று பொருத்தமற்றது.

2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி. என். பகவதி தலைமையில் 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் உடலகம ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு அமைத்த முன்னணி நபர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கலாம்.

வெளிநாட்டு நீதிபதிகளின் உள்ளடக்கம் எவ்வாறு மனித உரிமைகள் மீறல் பொறிமுறைகளில் சர்வதேச தராதரத்தையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும் என்பதற்கு நீதியரசர் பகவதி குழு ஒரு சிறந்த உதாரணமாகும்.

அதேபோல, இலங்கை அரசின் உடலகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச தராதரம் மற்றும் கோட்பாடுகளுக்கு அமையாமலும் வெளிப்படைத்தன்மை இன்றியும் நடைபெற்றது என்று கூறி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதை தவிர்க்கும்வகையில் ஒரு வருடத்தின் பின்னர் சர்வதேச சுயாதீனக் குழுவை நீதியரசர் பகவதி கலைத்தமையானது ஏன் உள்நாட்டு பொறிமுறை இலங்கைக்கு பொருத்தமற்றது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.

அப்போது காலஞ்சென்ற நீதியரசர் மார்க் ப்ர்ணாண்டோவுடனும் என்னுடனும் இந்த சர்வதேச சுயாதீனக் குழுவானது கலந்து பேசி அறிவுரைகளையுப் பெற்றிருந்தது என்பதை இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *