கோட்டா ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு பேராபத்து! – எச்சரிக்கின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
“தமிழ் மக்களுக்கு எதிரான அத்தனை கொடூரங்களையும் முன்னின்று வழிப்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு பேராபத்து.”
– இவ்வாறு எச்சரிக்கின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய இருந்த காலத்தில்தான் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்து உயிரோடு எதிர்த்தும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவரது நேரடி வழிகாட்டலிலேயே அத்தனை கொடூரங்களும் துன்பங்களும் நடந்துள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிராக அத்தனை கொடூரங்களையும் முன்னின்று வழிப்படுத்தியர் அவர்தான். ஆக அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் இன்னும் பலதையும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன. ஆகவே, மொத்தத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவர் வந்தால் தமிழ் மக்களுக்கு நிச்சயமாக பேராபத்துதான்” – என்றார்.