ஜூலையில் மாகாண சபைத் தேர்தல்! – கிழக்கு ஆளுநர் தகவல்
இவ்வருடம் ஜூலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு நிலுவைக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் காலப்பகுதி குறித்த அறிவிப்பை விடுத்தார்.
“மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். நானும் அதையே வலியுறுத்தி வருகின்றேன். இது குறித்து பிரதமருடனும் பேச்சு நடத்தப்பட்டது.
எனினும், தேர்தலை நடத்துவதற்காக இயற்றப்பட – திருத்தப்படவேண்டிய சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் காரணமாகவே காலம் தேவைப்படுகின்றது. எனினும், விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது.
எது எப்படியிருப்பினும், எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.