பொறுப்புக்கூறலில் இலங்கை மந்த கதி! – ஐ.நா. ஆணையர் காட்டம்; மைத்திரியின் தீர்மானத்துக்கு எதிராகவும் போர்க்கொடி

* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்
* சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில்
கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்
* ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கிளைக் காரியாலயம்
இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்

பொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதில் இலங்கை மந்தகதியில் செயற்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை இன்றைய (20) அமர்வில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதில் இலங்கை மந்தகதியில் செயற்பட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது. எனவே, பொறுப்புக்கூறும் கூறும் செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் தடங்கல் ஏற்படுகின்றது. அரசியல் ரீதியிலான தலையீடுகளும் இடம்பெறுகின்றன.

எனவே, உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் நீதி நிவாரணம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில் கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை இலங்கை நிராகரிக்கின்றமை கவலையளிக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க தேசிய காரியாலயம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவேண்டும்.

பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் தயார்” – என்றார்.

அதேவேளை, மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில், இது குறித்து ஐ.நா. ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“இலங்கையில் தற்போது மரணதண்டனை அமுலில் இல்லை. அது அவ்வாறே நீடிக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *