ஐ.நா. அதிகாரியை யாழில் அச்சுறுத்திய இராணுவம்! – ஜனாதிபதியிடம் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த அச்சுறுத்தல் சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தம்மை இலங்கை இராணுவத்தினர் எனக் கூறிக் கொண்ட இரண்டு பேர், யாழ். மாவட்டத்தில் உள்ள ஐ.நா. அதிகாரி ஒருவரின் வதிவிடத்துக்குள் நுழைந்தனர். ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்தார்.

அந்த ஐ.நா. அதிகாரி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்ததுடன், அந்த அதிகாரியை அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர் என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

எனினும், வடக்கில் உள்ள இராணுவத்தினர் தமது படையினர் எவரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புபடவில்லை என்று கூறியுள்ளனர்.

பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *