இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20 இல் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பணியகத்தின், கள நடவடிக்கை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் ஜோர்ஜெட் காக்னன், ஐ.நா மனித உரிமைகள் பணியகத்தின்  சட்ட ஆட்சி, சமத்துவம்,  பாகுபாடுகளின்மைக்கான  பிரிவின் தலைவர் மோனா றிஸ்மாவி உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவே கொழும்பு வந்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்துக்கு அமைய, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையைவரும் மார்ச் 20ஆம் திகதி  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார், பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அதற்கு முன்னோடியாகவே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் உயர் அதிகாரிகள் குழு இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழுவினர் நேற்று  நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

மேலும் பல அரச அதிகாரிகளையும், சிவில் சமூகத்தினர் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் இவர்கள் சந்தித்து ஜெனிவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள், மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறியவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *