தூக்குத் தண்டனை வருமாயின் ஜி.எஸ்.பியை இழக்க நேரிடும்! – சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்னும் இரண்டு மாதங்களில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எனினும், இதனால் நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
சிறிது காலம் நீக்கப்பட்டு மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாகப் பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெற்றுள்ளது.
எனினும், இந்த விசேட சலுகை ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தினால் இழக்கும் நிலைஏற்படலாம்” – என்றார்.