ரூ. 1000 வேண்டும் – மலையகத்தில் தொடர்கிறது போராட்டம்!
தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி தோட்டத்தொழிலாளர்கள் பொகவந்தலாவ நகரில் இன்றும் (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ – கொட்டியாகலை, செல்வகந்த, ஜெப்பல்டன், பொகவந்தலாவ கிழ் பிரிவு ஆகிய தோட்டங்களைச்சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களே இவ்வாறு போராட்டத்தில் இறங்கினர்.
முதலில் கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையிலிருந்து, செல்வகந்த சந்திவரை பேரணி இடம்பெற்றது. அதன்பின்னர், அட்டன், பொகவந்தலாவ, பலாங்கொடை பிரதான வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால், பொகவந்தலாவ அட்டன் போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டிருந்தது.
கறுப்பு கொடியினை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலார்கள், ஒப்பந்தத்தில் சைச்காதிட்ட தொழிற்சங்கங்கள் , தம்மை காட்டிக்கொடுத்துவிட்டன என்றும் விமர்சித்தனர்.
தமக்கு அடிப்படை நாட்சம்பளமாக 700 ரூபா போதும் என நாம் ஒருபோதும் கூறவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் போலிப்பிரசாரத்தை முன்னெடுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி அக்கரப்பத்தனை பெல்மோரல் மற்றும் லிந்துலை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
க.கிசாந்தன்