சிங்கள மயமாக்கலை உடன் தடுத்துநிறுத்துக! – ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி. அவசர கடிதம்

வவுனியா வடக்கு ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சிங்கள மயமாக்கலை உடன் தடுத்த நிறுத்தக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இன்று வெள்ளிக்கிழமை அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகும்.

இந்தக் கிராமத்தில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை மீள்குடியேறாத போதும் அங்குள்ள விவசாய நிலங்களில் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு அதனைச்சூழ சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விகாரையில் பௌத்த பிக்கு ஒருவரும் அவரது காவலாளிகள் இருவரும் தங்கியிருக்கின்றனர்.

மக்களது சொந்த நிலங்களை துப்பரவு செய்வதற்குத் தடையாக இருக்கும் வனவள திணைக்களத்தினர் சிங்கள மக்கள் என்ற காரணத்தால் இவ் விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

வவுனியா வடக்கின் கிழக்கு எல்லையில் உள்ள கச்சல் சமளன்குளம் கிராமத்தில் போர் காரணமாக பல வருடங்களாகக் கைவிடப்பட்ட வவுனியாவுக்குச் சொந்தமான இக்கிராமத்தின் குளம் அனுராதபுர கமநலசேவைத் திணைக்களத்தினரால் புனரமைக்கப்பட்டு சப்புமல்தென்ன எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கச்சல் சமளன்குளத்திற்கும் மேற்கே உள்ள ஊற்றுக்குளத்திற்கும் இடைப்பட்ட 3 மைல்கள் வரையான அடர்ந்த காட்டுப்பகுதியூடாகச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் காணித்துண்டுகள் துப்பரவு செய்யப்பட்டு சிறுகுடிசைகள் அமைக்கப்பட்டு புதிய சிங்களக் குடியேற்றத்துக்கான உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்துவதற்குப் பதிலாக எமது பரம்பலை மாற்றியமைக்கக் கூடிய வகையில் புதிய காடுகளை அழித்து புதிய சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க எத்தனிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் சிங்கள மயமாக்கத்திற்கும் ஊக்கியாக அரச அதிகாரம் காணப்படுகின்றது.

தற்போதைய அரசு நல்லிணக்கத்தைப் பேசினாலும் கடந்த காலத்தினில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

கடந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதைய அரசின் காலத்தில் பலப்படுத்தப்பட்டும் வருகின்றன.

தமிழ்க் கிராமங்கள் சிங்களக் கிராமமாக மாற்றமடைவது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ்க் கிராமம் கலாபோகஸ்வௌ என சிங்களக் கிராமமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இது போன்றே பல கிராமங்களினதும் பெயர்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டமை வரலாறு. பதிவில் குளம் -பதவியாக்குளம் எனவும் முதலிக்குளம் – மெறாவேவ, பெரிய குளம் – நாமல்வத்த, பட்டிப்பளை, கல்லோயா, புடவைக்கட்டு, சாகரபுர, அம்பாள் ஏரி- அம்பாறை, மணலாறு, வெலியோயா,குமரக்கடவை, கோமரங்கடவெல, பொரிய விளாங்குளம் – மகா திவுல்வெள, பனிக்கட்டி முறிப்பு, பனிக்கட்டியாவ என சிங்களப் பெயர் மாற்றங்கண்டு அவை சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன. இவை சில உதாரணங்கள் மட்டுமே. பட்டியல் நீண்டு செல்கின்றது.

ஒரு புறத்தில் இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. மறுபுறத்தில் வனவளத் திணைக்களம் காணிகளைப் பறிக்கின்றது. மகாவலி அதிகார சபை மக்களின் காணிகளை துண்டாடுகின்றது.

இன்னொரு புறத்தில் தொல்லியல் திணைக்களம் தொன்மச் சின்னங்களை ஆக்கிரமித்து விகாரைகள் அமைக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் செம்மலை நீராவியடிப் பிள்ளையார், வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, கல்லுமலை பிள்ளையார் ஆலயம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தின் நிலப் பகுதிகள் இவ்வாறெல்லாம் துண்டாடப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் நடந்த மண்ணில் நிலத்துக்கான போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னரும் குறிப்பாக தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் அமைந்துள்ள நல்லாட்சி அரசு என்று சொல்லப்படும் உங்களது தலைமையிலான அரசிலும் எமது நில உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது.

கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததன் விளைவே நாடு இன்று சந்திக்கும் பின்னடைவுக்கு மூல காரணம் எனத் தாங்களே தெரிவித்துள்ளீர்கள்.

மேற்குறித்த சம்பவங்களுக்கு காரணமான அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் தங்களுக்கு இவ்விடயங்கள் தெரிந்து நடக்கின்றதா அல்லது தெரியாமல் நடக்கின்றதா என எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஆதரவு வழங்கப்பட்டு கடந்த வரவு – செலவு திட்டத்தின்போது ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்கின்ற செயற்பாடு வடக்கில் வலிந்து திணிக்கப்படுகின்றது.

எமது நில உரிமை மட்டுமல்ல கலை, கலாசார விழுமியங்கள், பண்பாடு, பாரம்பரியம் தொடர்ந்தும் மறுக்கப்படுவது கவலையளிக்கின்றது.

பொது வெளியில் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர் என்று பறைசாற்றும் நீங்கள் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு மேற்கண்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இனியும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

மேலும் இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு வழிசமைக்காது என்பதுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தங்களின் கனவு பலிக்காமல் போய்விடும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கலையும் காடழிப்பையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தி எமது பூர்வீக நிலங்களில் நாம் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஜனாதியோபதியாகிய தங்களை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *