இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்காதீர்! – ஐ.நாவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஐ.நாவே கையில் கொடுத்தவர்களைத் தேட ஒ.ஏம்.பி. அலுவலகம் தேவையா?, ஐ.நாவே இரகசிய சித்திரவதை முகாம்களைக் கண்டுபிடித்து எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தா?, சர்வதேச விசாரணையே தேவை, ஐ.நாவே இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்காதே? உள்ளிட்ட வசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் கடைவீதி வழியாக பேரணியாகச் சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் பழைய பஸ் நிலையத்தை அடைந்திருந்தது.

எமது கோரிக்கைகளைப் பலமுறை முன்வைத்தபோதும் இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தால் அது நிறைவேற்றப்படாத நிலையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசுக்குக் காலநீடிப்பை வழங்காமல் அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளுக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தை அதற்கு யார் காரணியாக இருந்தார்களோ அவர்களால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் மூலம் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வுகள் கிடைக்கபோவதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். பல்கலைகழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், வர்த்தக சங்கத்தினர், ஓட்டோ உரிமையாளர் சங்கத்தினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள்,உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *