உணவுச் சட்டத்தை மீறிய 1200 பேருக்கு ஆப்பு!
உணவுச் சட்டத்தை மீறிய 1,200 க்கும் அதிகமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாக, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர, உணவுச் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக, 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம், வர்த்தகர்களிடமிருந்து அறிவிப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பிலான சுற்றிவளைப்புக்கள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள சிறார்கள் தொற்றா நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் சிறார்களிடையே முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது, இந்த விடயம் கண்டறியப்பட்டதாக, தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சிறார்கள் நாளாந்தம் உரிய முறையில் செயற்படாமை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களில் 13 வயது முதல் 16 வயது வரையிலான மாணவர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், 20 வீதமானோர் எவ்வித உடற்பயிற்சிகளும் இன்றி உள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலைமைகள், தொற்றா நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனவும், தொற்றா நோய்ப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.