யாழில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் மரணம்!
யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி – ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆறுகால்மடம், புதுவீதியைச் சேர்ந்த திரவியம் விஜயராசா (வயது – 65) என்னும் வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் மானிப்பாய் வீதி – ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இன்று காலையும் வழமை போன்று வீட்டில் இருந்து தனது வியாபார நிலையத்தை திறப்பதற்காக அவர் நடந்து சென்றுள்ளார்.
வியாபார நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனால் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்ட வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த யாழ். பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.