மைத்திரியுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வரும்! – பிரதமர் ரணில் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனத் தாம் நம்புகிறார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த 16ஆம் திகதி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து அமைச்சர்கள் பட்டியலைக் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்த சிலரது பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனத் தகவல் வெளியானது.

இந்த விடயமானது பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்ததாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர்,

“அமைச்சர்கள் நியமனத்தில் ஜனாதிபதியுடன் சில மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகின்றேன். நாடாளுமன்றத்தில் அமைச்சரவை நியமனம் எப்படி நடந்தது என்பது பற்றிப் பேசுவேன்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *