எதிர்க்கட்சித் தலைவர் யார்? நீடிக்கின்றது கடும் சர்ச்சை! – விரைவில் முடிவு என்கிறார் சபாநாயகர்
“நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முடிவை அறிவிப்பேன்.”
– இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
இன்று காலை 10.30 மணிக்குக் கூடிய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில், அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக இதற்குத் தீர்வு காணுமாறும் மூன்று கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியானதா என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதையடுத்து இறுதி முடிவை இன்று அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் அன்று தெரிவித்திருந்தார். எனினும், இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவில்லை.
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. தெரிவுக்குழு ஊடாக இதற்குத் தீர்வு காணுமாறு கோரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் எனக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி எவருக்கு வழங்கப்படலாம் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்று சபாநாயகர் இன்று தெரிவித்தார். இதனால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கடும் சர்ச்சை தொடர்கின்றது.