அமைச்சரவை – இராஜாங்க – பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கை! 19 ஆவது திருத்தச்சட்டம் சொல்வது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தனியாட்சி அமைக்க தீர்மானிக்கும் பட்சத்தில், அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை 30 ஆகக் குறையும் என்பதுடன், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆக வரையறுக்கப்படும்.
19 ஆவது திருத்தச்சட்டம் நிவேறுவதற்கு முன்னர் அமைச்சரவை மற்றும் ஏனைய அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. இதனால் வகைதொகையின்றி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ‘ஜம்போ கெபினட்’ என்றுகூட இலங்கையின் அமைச்சரவை விமர்சிக்கப்பட்டது.
எனினும், 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐயும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஐயும் விஞ்சுதலாகாது என்று மேற்படி சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசொன்று அமையும் பட்சத்தில் மாத்திரமே. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30இலிருந்து 45 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கையை 40இலிருந்து 45 ஆகவும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் அதிகரித்துக்கொள்ளமுடியும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை பிரதமராக பதவியேற்ற பின்னர், புதிய அமைச்சரவையும் மறுநாள் பொறுப்பேற்கும்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டரசில் உத்தியோகபூர்வமாக இணையும் பட்சத்தில் மறுபடியும் தேசிய அரசு அமைக்கப்படலாம். மாறாக ஒருசில உறுப்பினர்கள் ஆதரவளித்தால் , சு.க. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிரணியில் அமர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றால் கூட்டரசு அமைக்கமுடியாத நிலை ஏற்படும்.
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க ஆதரவளித்தாலும், ஆளுங்கட்சியில் இணையப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது. ஜே.வி.பியும் இணையாது. எனவே, தனியாட்சி அமைவதற்குரிய சாத்தியமே இருக்கின்றது.