மஹிந்த – ரணில் திடீர் சந்திப்பு! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று காலை திடீர் சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் நடைபெற்றன. இதன் பின்னர் மஹிந்தவும், ரணிலும் நாடாளுமன்றத்திலுள்ள எம்.பிக்களுக்கான நூலக அறையில் தனியாகச் சந்தித்து சில நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கையின் அரசியல் நெருக்கடியைத் தணிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று மாலை நடைபெற்ற முக்கிய சந்திப்பின் பின்னர் மஹிந்தவும் ரணிலும் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை…. எனவே, வெள்ளிக்கிழமைகளில் ஜனாதிபதி எடுக்கும் அதிரடி முடிவுகளை இன்று நள்ளிரவு வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *