நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம்! – ஐ.தே.க. அதிரடி

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் கூடும் போது, தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த சர்வகட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட ஐ.தே.க.,

“முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிவடைந்தது ஏமாற்றம் அளிக்கின்றது. நாடாளுமன்றத்தில் மீண்டும் நாங்கள் எமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, சர்வகட்சிக் கூட்டம் என்று கூறப்பட்ட கூட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“போலிப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதால், முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிக்க முனைகின்றனர்.

என்ன ஒரு அவமானம். தங்களின் அரசியல் மீட்சிக்காக இலங்கையைத் தாழ்த்துகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ வெளியேற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, “மீண்டும் எமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியும் என்று ஜனாதிபதியிடம் கூறினோம். ஆனால், அவர் அதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *