மஹிந்தவுக்கு ஐ.தே.க. புது வியூகத்தில் ஆப்பு! – பிரதமர் செயலகத்தை முடக்கும் பிரேரணை முன்வைப்பு
சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும் பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.
பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாடாளுமன்றக் குழு அறையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்துள்ளது.
இந்தப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரச நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகின்றது. அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஷவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
ஐ.தே.கவின் இந்த நடவடிக்கை மஹிந்த அரசுக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.