சபாபீடத்தை ஆக்கிரமித்து மஹிந்த அணி அடாவடி – எம்.பிக்கள், பொலிஸார்மீது மிளகாய்த் தூள் தாக்குதல்

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், மிளகாய்த் தூளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதனால், முகம் மற்றும் உடற்பகுதிகளில் மிளகாய்த் தூள் வீசப்பட்ட நிலையில் அவர் ஏனைய உறுப்பினர்களால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அதேவேளை மகிந்த அணியினரின் மிளகாய்த் தூள் வீச்சு மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களான காமினி ஜெயவிக்ரம பெரேரா, விஜித ஹேரத், மலிக் சமரவிக்ரம ஆகியோர் நாடாளுமன்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

….

 

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, மகிந்த ராஜபக்ச அணியினரின் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, சபாநாயகரின் ஆசனத்தை மகிந்த ராஜபக்ச அணியினர் ஆக்கிரமித்திருந்தனர்.

இதனால், சபாநாயகர் சுமார் 30இற்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன், அவைக்கு வந்தார். காவல்துறையினர், அவருக்கும் செங்கோலுடன் வந்த படைக்கல சேவிதருக்கும் மனிதச் சங்கிலி அமைத்து பாதுகாப்பு அளித்து அழைத்து வந்தனர்.

அப்போது மகிந்த அணியினர் சபாநாயகர் மீதும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். நாற்காலியால்  காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

 

மற்றும் சில உறுப்பினர்கள் கைகளாலும், கால்களாலும் காவல்துறையினரை தாக்கினர். கையில் கிடைத்த பொருட்களாலும் தூக்கி வீசினர். மிளகாய்த் தூளும் வீசப்பட்டது.

இதில் காவல்துறையினர் பலர் காயமடைந்து, நாடாளுமன்ற மருத்துவ அறையில் சிகிச்சை பெற்றனர்.

சபாநாயகருக்குப் பாதுகாப்பு அளித்து காவல்துறையினர் சபா மண்டபத்துக்குள் வந்தமை இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *