பாராளுமன்றம் ஏன் கலைக்கப்பட்டது? அரசுக்குள் கருத்து முரண்பாடு!
“பாராளுமன்றம் கலைப்பு” தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களின் அபிப்பிராயத்தை அறிய வாய்ப்பு வழங்க வேண்டுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, சபாநாயகரின் பக்கச் சார்பான செயற்பாடுகளே, பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மக்களின் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே பாராளுமன்றம் கலைப்பு இடம் பெற்றதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இவ்வாறு, பல தரப்பினரும் தமக்கு ஏற்றவாறு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, பொது மக்களின் உள்ளங்களில் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு தரப்பினரும் இருந்து வருகின்றார்கள் என்பதே உண்மை. நாட்டில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்திருப்பது மாத்திரமன்றி, அதற்கு ஏற்றாற் போல் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்றும், அரசியல் அவதானிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )