‘சர்கார்’ படத்துக்கு எதிராக அ.தி.மு.க. போர்க்கொடி! ரஜினி கடும் கண்டனம்!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தமிழகத்தில் கிளம்பியுள்ளன.

மேலும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிரான வன்முறைகள் வெடித்துள்ளன. படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அ.தி.மு.கவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்குப் பொலிஸார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைக் கைதுசெய்வதற்காகவே பொலிஸார் சென்றனர் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதற்குப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “தணிக்கைக் குழுவால் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு திரைப்படத்தை எதிர்த்து வன்முறைகளில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *