பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி: இதில் கூட்டமைப்பினர் உறுதி! – சம்பந்தன் திட்டவட்டம்

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய படையினருடன் தமிழ்க் கைதிகளை சேர்க்கக்கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தனிப்பட்ட மற்றும் பொதுக் குற்றங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடயத்தில் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களுக்குப் பொதுமன்னிப்பை வழங்கி நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசு முன்வைத்துள்ள யோசனை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்க் கைதிகள் சிலரின் குற்றங்கள் அவர்களின் அரசியல் உரிமையுடன் சம்பந்தப்பட்டுள்ளன. படைத்தரப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் இழைத்தனர் என்று கூறப்படும் குற்றங்கள் சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுடன் தொடர்புடையவையாகும். இந்த இரண்டையும் ஒரே அடிப்படையில் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நெருக்கடிகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வதற்காக இவ்விதமான கருத்துக்களை அரச தரப்பினர் முன்வைக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *