தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: பிரதமருடன் சுமந்திரன் எம்.பி. பேச்சு
“குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவேன். இன்று அல்லது நாளை இந்தச் சந்திப்பு இடம்பெறும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாம் ஒன்பது வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கருத்தில்கொண்டு, குறுகியகால புனர்வாழ்வையாவது வழங்கி விடுவிக்குமாறு கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனும் சென்றிருந்தார்.
“அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமருடன் இன்று அல்லது நாளை தெரியப்படுத்துவேன். அவர்கள் 9 ஆண்டுகாலம் தடுத்து வைக்கப்பட்டதையும் கவனத்தில் எடுத்து குறுகியகால புனர்வாழ்வுடன் விடுதலை செய்வது தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்” என்று இந்தச் சந்திப்பின் பின்னர் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளான, ம.சுலக்ஷன், இ.திருவருள், சூ.ஜெயச்சந்திரன், இரா.தபோரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவசீலன், த.நிமலன் ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.